குளத்துப்புழா சாஸ்தா கோயில் என்பது இந்தியாவின் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குளத்துப்புழாவில் அமைந்துள்ள சாஸ்தாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். இது கேரளாவில் உள்ள ஐந்து முக்கியமான சாஸ்தா கோவில்களில் ஒன்றாகும், மற்றவை ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை மற்றும் கந்தமாலா. அங்குள்ள சிலை பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது மற்றும் எட்டு கற்களால் ஆனது. இந்த கோவில் மீனூட்டு (மீன் உணவு) பிரசாதத்திற்கு பெயர் பெற்றது.திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயில் கொல்லம் மாவட்டத்தில் புனலூர் வட்டத்தில் குளத்துப்புழாவில் அமைந்துள்ளது. இது கல்லடா ஆற்றின் கிளை நதியான குளத்துப்புழா ஆற்றின் கரையில் கொல்லத்திலிருந்து சுமார் 64 கிமீ (40 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
புராணத்தின் படி, பரசுராமரால் நிறுவப்பட்ட ஐந்து சாஸ்தா கோவில்களில் குளத்துப்புழா கோயிலும் ஒன்று. சாஸ்தா தன் மீது ஆசை கொண்ட ஒரு ஜல கன்யகாவை (கடற்கன்னி) மீன் வடிவில் கோவில் குளத்தில் வாழ அனுமதித்ததாகவும் நம்பப்படுகிறது. இந்த கோயில் பந்தளம் ராஜாவால் நிறுவப்பட்டது என்பது பொதுவான நம்பிக்கை, ஆனால் சாஸ்தாவின் சிலை கொட்டாரக்கரையைச் சேர்ந்த ஒரு பிராமணரால் நிறுவப்பட்டது. முன்பு இந்த கோவில் கொட்டாரக்கரை அரசர் வசம் இருந்தது. பின்னர் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வசம் ஒப்படைக்கப்பட்டது. கோயிலின் தாந்த்ரீக உரிமை கொக்கலத்து மடத்தால் நடத்தப்படுகிறது.
இக்கோயிலின் பிரதான தெய்வம் சாஸ்தா. அவர் பாலசாஸ்தா (குழந்தை வடிவம்) வடிவில் இருக்கிறார் மற்றும் பொதுவாக குளத்துப்புழா பாலகன் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் குலதெய்வத்தைப் போற்றி “குளத்துப்புழையிலே பாலகனே” என்ற பிரபலமான பாடல் ஒன்று உள்ளது. இங்குள்ள தெய்வம் உக்கிரமான மனநிலையிலும் (உக்ரமூர்தி) மங்களகரமான மனநிலையிலும் (மங்களப்பிரதாயகன்) இருக்கிறார். சிவன், யக்ஷி, விஷ்ணு, விநாயகர், பூதத்தன், நாகா, கருப்பு சாமி ஆகியோர் துணை தெய்வங்கள்.
சாஸ்தாவிற்கு மிகவும் பிடித்தமான மீன்கள் என்று கருதப்படுவதால், கோவில் குளம் பல மீன்களை பாதுகாக்கிறது. தோலில் உள்ள மருக்கள் குணமடைய பக்தர்கள் மீனூட்டத்தை (மீன் ஊட்டுதல்) வழங்குகின்றனர். மீன்கள் திருமக்கள் (தெய்வீகக் குழந்தைகள்) என அழைக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை Tor Khudree மற்றும் Hypselobarbus Thomassi இனத்தைச் சேர்ந்தவை, இவை அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன. இங்கு மீன்பிடிப்பதும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.